வியாழன், 25 மார்ச், 2010

ஏன் பிடி கத்தரிக்காய் வேண்டாம் ...?

இந்த கட்டுரை துணை எழுத்து என்னும் வலைப்பூவில் வெளியானது. வலைப்பூ உரிமையாளரின் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படுகிறது.

===========================================

ஏன் பிடி கத்தரிக்காய் வேண்டாம் ...?

சில மாதங்களாக இந்திய பத்திரிக்கைகள் விரட்டிக் கொண்டுள்ள பிடி கத்தரிக்காய்க்குப் பின்னால் உள்ள கதை மிக பெரியதும், ஆபத்துமானதும் ஆகும்.பிடி கத்தரிக்காய் என்பது Trans Genetic என்று சொல்லப்படும் மரபணு மாற்றப்பட்ட அல்லது மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் ஆகும்.கத்தரிக்காய் உடன் Cry1Ac என்ற மரபணுவை செலுத்தி இந்த வகை பிடி கத்தரிக்காய் உருவாக்கப்பட்டது.இந்த Cry1Ac என்ற மரபணு Bacillus thuringiensis என்ற, மண்ணில் காணப்படும் பாக்டிரியாவில் இருந்து பெறப்பது ஆகும்.

இந்த மாபெரும் சோதனையை 8 ஆண்டு காலமாக செய்து முடித்த இந்திய நிறுவனம் Maharashtra Hybrid Seeds Company Limited.(Mahyco). ஆனால், இது Monsanto என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து செய்த கண்டுபிடிப்பாகும்.

இந்த கதை தொடங்கியது சென்ற வருடம் அக்டோபரில்.Mayco தனது கண்டுபிடிப்பை Genetic Engineering Approval Committee (GEAC) of India விடம் சமர்பித்து, இந்தியாவில் இந்த பிடி கத்தரிக்காய் விதைகளை விற்பதற்கு அனுமதி வாங்கி விட்டது. எந்த ஒரு செயல் முறை நிரூபணமும் இல்லாத இந்த பிடி கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கியது மிகப்பெரிய கொந்தளிப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

பொதுவாக மரபணு மாற்றப்பட்ட விதைகளினால் ஏற்படும் நன்மைகள் என்று சொல்லப்படுவதில், மிக முக்கியமானவைகள் - பயிர்கள், பூச்சிகளுக்கு எதிரான அதிகப்படியான எதிர்ப்பு சக்தியுடன் வளரும் மற்றும் பல மடங்கு அதிக விளைச்சல் தரும் என்பதேயாகும்.இந்தியளவில் ஆண்டு ஒன்றுக்கு 1000 கோடி ருபாய் வரை பூச்சிகளால் கத்தரிக்காய் விளைச்சலுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகிறது.எனவே இந்த பிடி கத்தரிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்ற மாயை அரசால் உருவாக்கப்பட்டது.

விவசாய துறை அமைச்சர் சரத் பவார் GEAC அனுமதி வழங்கிய பிறகு மத்திய அரசால் இதை ஒன்றும் செய்ய முடியாது என்று மிக சீரியஸ் ஆக காமெடி செய்து பின்னர் இது சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கவனிக்க வேண்டியது என்று சொல்லி ஒதுங்கி விட்டார்.

அதன் பின்னர்தான் இதன் கடுமையான விளைவுகளை சுற்று சூழல் ஆதரவாளர்கள் கத்தி கத்தி சொன்ன பிறகு மீடியாக்கள் விழித்து கொண்டு நாடு முழுவதும் இதன் வீரியம் தெரிய தொடங்கியது.

ஏன் இந்த பிடி கத்தரிக்காய்க்கு இவ்வளவு எதிர்ப்புகள்...?மரபணு மாற்றப்பட்ட உயிர்களில் அது கத்திரிக்காயை இருந்தாலும் காயத்திரியாய் இருந்தாலும், பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆவதர்க்கான சாத்திய கூறுகள் மிக அதிகம்.அதுவும் பிடித்தது பிள்ளையாரா இல்லை குரங்கா இன்று கண்டறிவதற்கே 40-50 வருடங்கள் ஆகலாம்.

அதாவது இப்போது மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பயிர் செய்து, விளைந்த கத்திரிக்காயை நாம் அவியல் வைத்து சாப்பிட்டு, பின் நமக்கு திருமணமாகி, நமக்கு ஒரு குழந்தை பிறந்து அவனுக்கோ அல்லது அவளுக்கோ 20 வயது ஆகும்போது, அவர்களுக்கு தீடீர் என்று வரும் வியாதிக்காக மருத்துவரிடம் செல்லும்போதுதான் அன்று அவியல் சாப்பிட்ட கத்திரிக்காயில் இருந்த பிரச்சனைகள் குறித்து உண்மைகள் வெளிப்படும்.

இந்த பிடி கத்தரிக்காய் மூலம் கிட்னி முதல் நுரையீரல் வரை பாதிக்க வாய்ப்பு உண்டு என்று சர்வதேச நாடுகள் அறிவித்த போதும் இதை GEAC எப்படி அனுமதித்தார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுப்பப்பட்டது.ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இந்த பிடி கத்தரிக்காய்யை தடை செய்து உள்ளது.

இந்த அனுமதிக்குப் பின்னால் GEAC விஞ்ஞானிகளுக்கும், அமெரிக்க நிறுவனமான Monsanto விற்கும் அமெரிக்க அரசின் தூண்டுதலினால் மிக பெரிய லாபி நடந்திருக்கக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டது.

GEAC இதற்கான அனுமதியை, விஞ்ஞானிகளின் வெறும் பேப்பர் நிரூபணங்களை வைத்து கொடுத்ததுதான் ஜீரணிக்க முடியாத ஒன்று.

இந்தியாவில் ஜனநாயகம் தோற்றுபோவது, இது போன்ற இடங்களில் தான்.ஒரு வேளை இது பெரிய பிரச்னை ஆக்கப்படாமல், நாடு முழுவதும் இந்த விதைகள் பயிரிடப்பட்டு நாம் அனைவரும் மரபணு மாற்றப்பட்ட அவியல் உண்டிருந்தால், நமக்கு அடுத்த சந்ததி கண்டிப்பாக அதற்கான விலையை கொடுக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும்.

நம்முடைய சமுதாய பொறுப்பின்மையும், சகிப்புத்தன்மையும் பல இடங்களில் காசாக்கப்படுகின்றன, சில இடங்களில் பல ஆயிரம் உயிர்களை பலி வாங்குகின்றன.

நம்மை சுற்றி நடப்பவற்றை நாம் கேள்வி கேட்காமல் கடந்து போவதால் தான், அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நம்மை மிக சுலபமாக ஏமாற்றுகிறார்கள்.

அதிஷ்டவசமாக பிடி கத்தரிக்காய் விசயத்தில் அப்படி எதுவும் நடக்க வில்லை.ஆனால் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எவ்வளவோ முடிவுகள், நாள் தோறும் நம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு தான் வருகின்றன.அதை வெளியே கொண்டு வந்து தடுக்கும் திறமையும் உரிமையும் ஊடகங்களுக்கு மட்டுமே உள்ளன.
நன்றி: http://thunaiezhuthu.blogspot.com/2010/03/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக