ஞாயிறு, 4 டிசம்பர், 2011

சமையல் எரிவாயுவுக்கு (கியாசுக்கு) குட் பை சொல்லுங்க...

கியாசிற்கு குட்பை சொல்லுங்க!
 செயலர் திரு வாசுதேவ், 
விவேகானந்தா கேந்திரா அபிவிருத்தி மையம், கன்னியாகுமரி. 
விலை உயர்வு, தட்டுப்பாடு, என்பதற்காக மட்டுமல்ல... ஒரு காலத்தில், இந்த சமையல் காஸ் இல்லாமல் போகப் போகிறது... ஒரு கட்டத்தில், அனைத்துப் எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு உண்டாகலாம். எதிர்காலத்தில், கியாசை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்று வழிமுறைகளைத் தேடிக் கொள்வதும் கற்றுக் கொள்வதும் காலத்தின் அவசியம். வீட்டில் மிச்சப்படும் காய்கறி மற்றும் உணவுக் கழிவிலிருந்தே, எரிவாயு உற்பத்தி செய்யலாம். அதற்காகவே, "சக்தி சுரபி' எனும், எரிவாயு கலனை எங்கள் மையம் உருவாக்கி உள்ளது. 

இதில், இரண்டு வகைகள் உள்ளன:
ஒன்று இடம் விட்டு இடம் பெயர்ந்து எடுத்துச் செல்லக் கூடிய வகையில், பிளாஸ்டிக் கலனால் ஆனது; 
சக்தி சுரபி (பிளாஸ்டிக் கலன்) நன்றி: vknardep.org
மற்றொன்று, நிலையானது; அது, சிமென்ட் கட்டுமானத்தால் ஆனது. கழிவுகளை உள்ளே செலுத்தும் குழாய், ஜீரணிப்பான், வாயு கொள்கலன், தண்ணீர் வெளியேறும் பாதை, உரம் வெளியே வரும் பாதை, இத்தனையும் சேர்ந்தது தான், சக்தி சுரபி. 

வேண்டாம் என, நாம் வீசி எரியும் சமையலறைக் கழிவுகள் மட்டுமே, இதற்குத் தீனி. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கலன் மூலம், ஒரு நாளைக்கு ஒரு கன மீட்டர் வாயுவை உற்பத்தி செய்யலாம். இது, நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்திற்கு போதுமானது. இந்த கலனை, நகர்ப்புறத்தில் உள்ளவர்களும் தாராளமாக அமைத்துக் கொள்ள முடியும். மாநகரம் அல்லாது, பிற நகரங்கள் மற்றும் கிராமங்களில் கால்நடை வளர்ப்பது சாத்தியமானது தான். அப்படி வளர்ப்பவர்களுக்கு, சாண எரிவாயு கலன் ஒரு வரப்பிரசாதம். 

வீட்டில் இரண்டு மாடு வளர்ப்பவர்கள் கூட, துணிந்து காசிற்கு குட்பை சொல்லி விடலாம் அல்லது அக்கம் பக்கம் யாராவது மாடு வளர்த்தால் கூட, சாணத்தை வாங்கிக் கொள்ளலாம். தினமும், 25 கிலோ சாணத்தை கலனுக்குள் செலுத்தினால், நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்திற்கு, ஒரு நாளுக்குப் போதுமானதாக இருக்கும். இதற்கு, அரசு மானியமும் இருக்கிறது! 
(நன்றி தினமலர் நாளிதழ் - 04-12-2011)

சக்தி சுரபி குறித்த மேலதிக விவரம் பெற இங்கே சொடுக்குக: விவேகானந்த கேந்திரா அபிவிருத்தி மையம் (கன்னியாகுமரி). மையத்தின் இந்த வலைதளம் சக்தி சுரபியை எப்படி உங்கள் இல்லத்தில் நிறுவுவது என்ற முழு விவரங்களையும் உங்களுக்கு அளிக்கிறது. சக்தி சுரபி இயற்கை எரிவாயு கலனை உங்கள் இல்லத்தில் அமைத்து பயன் பெற வேண்டுகிறோம். 


வாழி நலம் சூழ. 

1 கருத்து:

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிகவும் நன்றி அஷ்வின் ஜி. வலைத்தளத்தைப் போய்ப் பார்க்கிறேன்.

கருத்துரையிடுக