சனி, 8 பிப்ரவரி, 2014

நினைத்தது நிறைவேற குபேரத் தியானம் - 3


உங்கள் கவனத்தை இதயத்திற்குக் கொண்டு செல்லுங்கள். உங்கள் இதயத்திலிருந்த இறுக்கமும் மற்ற கோபதாபங்களும் அறவே நீங்கி விடுகின்றன.  உங்கள் இதயம் இப்பொழுது மிக நிதானமாக இயங்குவதை உணருங்கள். அத்துடன் இதயம் முழுவதும் அன்பு  நிறைந்திருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். நுரையீரல்கள் மீது   உங்கள் கவனம் செல்லட்டும். மெதுவாகச் சுவாசம் செய்யுங்கள்; நுரையீரல்கள்  சீராக இயங்குவதை உணருங்கள்.

மார்புப் பகுதி முழுவதும் ஓய்வில் மிக லேசாகி விடுவதை உணருங்கள். 

அங்கிருந்து  உங்கள் கவனம் மெதுவாகத் தோள்களுக்குச் செல்லுகிறது.

நீண்ட காலமாகப்  பல சுமைகளைத் தாங்கிய தோள்கள் அவை. அந்தச் சுமைகள் எல்லாமே மெல்ல மெல்ல நீங்கி விடுகின்றன. தோள்களைத் தளர விடுங்கள். இங்கிருக்கும் இறுக்கம் யாவும் முற்றிலுமாக மறைந்து விடுகிறது. உங்கள் தோள்கள் மிகவும் லேசாகி விடுகின்றன. உங்கள் தோள்கள் ஓய்வில் பாரம் நீங்கிப் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள்.  இந்த உணர்வைச் சற்று அனுபவித்து மகிழுங்கள்.

இதன் பிறகு உங்கள் கவனம் உங்கள் கைகளில் இருக்கட்டும். உங்கள் கைகளில் இருந்த இறுக்கம் எல்லாம் முற்றிலும் விலகி விடுவதை உணருங்கள். உங்கள் கைகள் மிகவும் லேசாகி விட்டன. மெல்ல மெல்ல உங்கள் விரல்களின் வழியே எல்லா இறுக்கமும் வெளியேறி விடுகிறது. முழங்கைகள் முன்கைகள் மணிக்கட்டுகள் உள்ளங்கைகள் விரல்கள் யாவும் மிக லேசாக இருக்கின்றன. அவை யாவும் ஓய்வில் குளிர்ந்து புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். இந்த உணர்வு உங்களுக்குச் சந்தோஷத்தையும், நிம்மதியையும்  தருகிறது.

உங்கள் கவனத்தை மெதுவாகக் கழுத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.  தலையின் பாரம் நீங்கப் பெற்றதை உணருங்கள். தலையை மெதுவாக வலது பக்கம் திருப்பிச் சிறிது நேரத்தில் மீண்டும் நேராக வையுங்கள். அவ்வாறே இடதுபக்கம் திருப்பி மீண்டும் நேராக வையுங்கள். பாரம் இறுக்கம் முற்றிலுமாகக் குறைந்து மறைந்து விடுகிறது.

உங்கள் கழுத்துப் பகுதி மிகவும் லேசாகி விட்டது போல் உணருகிறீர்கள். இப்பொழுது உங்கள் கவனம் உங்கள் தாடை மற்றும் பற்களில் இருக்கட்டும். கோபங்களும் இறுக்கங்களும் நிறைந்த இடம் இது. அவை மெல்ல மெல்ல விலகிப் போவதை உணருங்கள்.  தாடையை விரித்து மூடித் தளர விடுங்கள். பற்களையும் நிம்மதியாக லேசாக வைத்திருங்கள். இப்பொழுது உங்கள் கவனம் உங்கள் வாயில் இருக்கட்டும்.

இறுகிய வாய் மெல்லத் தளரட்டும். இறுக்கம் மறையட்டும். உங்கள் கவனம் நாக்குக்குச் செல்லட்டும். நாக்கைச் சிறிது வெளியே தொங்க விட்டு உள்ளே இழுங்கள். மெதுவாக உங்கள் கவனம் கன்னங்களுக்குப் போகட்டும். கன்னங்களில் இருந்து இறுக்கம் மறைவதை உணருங்கள். உங்கள் கன்னங்களில் லேசான சிலிர்ப்பு ஏற்படலாம்.

இதை அனுபவித்து மகிழுங்கள்.  இறுக்கம் எல்லாம் மறைந்து இந்த இடம் லேசாகி விட்டது. உங்கள் உதடுகளால் புன்னகை செய்யுங்கள். இறுக்கம் மறைந்து மிக லேசாக இருப்பதாக உணருங்கள். இந்தப் புன்னகை அப்படியே இருக்கட்டும்.

மூக்குத் துவாரத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். மெதுவாக மூச்சு விட்டு மூக்கை உணருங்கள்.

இப்பொழுது உங்கள் கவனம் கண்களில் இருக்கட்டும். கண்களை மெதுவாகச் சிறிது திறந்து வானத்தை அல்லது கூரையைப் பாருங்கள். பின் மூடிக் கொள்ளுங்கள்.

கண்மணியைக் கண் இமைக்குள்ளேயே கீழ் நோக்கிச் செலுத்துங்கள். பழைய நிலைக்குக் கொண்டு வாருங்கள். கண்கள் தான் உங்கள் மனத்தின் சன்னல்கள். கண்களுக்கு ஓய்வுதேவை.அந்த இடத்தில் இருந்த இறுக்கம் முற்றிலும் விலகுவதை உணருங்கள். உங்கள் கண்களின் மீதான அழுத்தம் குறைவதை உணருங்கள். முற்றிலும் இறுக்கம் நீங்கி உங்கள் கண்கள் லேசாவதை உணருங்கள். உங்கள் கண்களில் குளிர்ந்த நிம்மதி பரவுகிறது. மெதுவாக உங்கள் கவனத்தைக் கண் இமைகளுக்குக் கொண்டு வாருங்கள். கண் இமைகளில் இருந்த இறுக்கம் முற்றிலும் காற்றாக மறைந்து விட்டது. உங்கள் இமைகள் மிக நிம்மதியாக ஓய்வாக, மலரின் இதழ்கள் போல மென்மையாக இருக்கின்றன. உங்கள் இமைகள் ஓய்வாக இருக்கட்டும். கண்களும் இமைகளும் இதே நிம்மதியான நிலையில் தொடர்ந்து இருக்கட்டும்.

உங்கள் கவனத்தை மெதுவாக உங்கள் புருவத்திற்குக் கொண்டு வாருங்கள். புருவத்தைச் சிறிது உயர்த்திப் பழைய நிலைக்குக் கொண்டு வாருங்கள். புருவங்களில் இருந்த இறுக்கம் எல்லாம் மறைந்து விட்டன. உங்கள் புருவம் மிக நிம்மதியாகச் சலனமற்று இருக்கின்றன.

அங்கிருந்த கவலைகள் எல்லாம் மறைந்து விட்டன. பாரம் குறைந்து விட்டது. உங்கள் புருவங்கள் மிக லேசாக மிக நிம்மதியாக இருக்கின்றன.

உங்கள் கவனத்தை நெற்றிக்குக் கொண்டு வாருங்கள். உங்கள் நெற்றியிலிருந்து இறுக்கம் எல்லாம் வெளியேறுகிறது. உங்கள் நெற்றி.இப்பொழுது மிகவும் மென்மையாக இருக்கிறது இங்கிருந்த கவலையின் ரேகைகள் எல்லாமே மறைந்துவிட்டன.

மனதில் உள்ள எல்லா நினைப்புகளையும் திட்டங்களையும் அகற்றி விட்டீர்கள். உங்கள் நெற்றி இப்பொழுது மிகத் தெளிவாக நிம்மதியாக இருக்கிறது.

உங்கள் கவனத்தைக் காதுகளுக்குக் கொண்டு வாருங்கள். காதுகளுக்கு வரும் ஒலிகளைக் கேளுங்கள். தடுக்கவேண்டாம். ஒலிகளிலிருந்து விலகி அவைகளுக்குச் சாட்சியாக இருங்கள். உங்கள் கவனத்தை மெல்ல உச்சந் தலையில் செலுத்துங்கள். கவனம் அங்கேயே இருக்கட்டும். உச்சந்தலை சிறிது வெதுவெதுப்பாக இருப்பதை உணருங்கள்.

மெல்ல இந்த இடத்தில் இருந்து இறுக்கம் எல்லாம் வெளியேறுவதை உணருங்கள். உச்சந்தலை மிகவும் லேசாகிப் போவதை உணருங்கள். ஓய்வில் உச்சந்தலை குளிர்வதை உணருங்கள். இப்பொழுது உங்கள் முகம் முழுவதும் இறுக்கம் குறைந்து மிக லேசாக, மிக அழகாக ஒளி பொருந்தியதாக இருக்கிறது. புன்னகையுடன்இருக்கிறது.

(தொடரும்)

வருகிற பகுதி நிறைவுப் பகுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக